முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷமிட்ட தமிழக, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர் வயலார் ரவி சமாதானப்படுத்தினார்.
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆதரித்தும், எதிர்த்தும் தமிழக, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே சரமாரியாக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று கேரளா அரசு கூறி வருகிறது. ஆனால் நூறாண்டுகளைத் தாண்டியும் வலுவுடன் இருக்கும் அணையை உடைக்கக் கூடாது என்று தமிழகம் போராடி வருகிறது.
இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தர்ணா நடத்தினர். பல்வேறு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழகம் குறித்து குறை கூறி கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு திரட்டினர்.
ஆனால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 28.11.2011 இதுகுறித்து பொறுமையாய் அமைதிகாத்தனர்.
இந்த நிலையில் இன்று (29.11.2011) நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை அருகே கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி கோஷமிட்டனர்.
இதைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு கூடி கேரளாவைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இந்தச் சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சமாதானப்படுத்தினார். பின்னர் இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலைந்து சென்றனர்
0 கருத்துகள்